புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு :விளக்கம் அளிக்க பா.ம.க., வலியுறுத்தல்
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு :விளக்கம் அளிக்க பா.ம.க., வலியுறுத்தல்
UPDATED : ஆக 20, 2026 11:24 PM
ADDED : ஆக 20, 2026 11:23 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய மின் மீட்டர் பொருத்திய பின் அதிகரிக்கும் கட்டண உயர்வுக்கு மின்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தியுள்ளது.
பா.ம.க., கிழக்கு மண்டல மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை:
புதுச்சேரி வீடுகளில் பழைய மின் மீட்டர்கள் அகற்றப்பட்டு புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு புதிய மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, மின்கட்டணம் எதிர்பாராத வகையில் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
வழக்கமாக செலுத்தி வந்த மின்கட்டணத்தை விட திடீரென கட்டணம் அதிகரித்துள்ளது குறித்து மின் துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். புதிய மீட்டர்கள் துல்லியமானவை என்றால், பழைய மீட்டர் மற்றும் புதிய மீட்டரின் பதிவுகளை ஒப்பிட்டு, மின் பயன்பாட்டில் உண்மையான மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை வெளிப்படையாக ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும்.
சந்தேகம் உள்ள வீடுகளில் மீட்டரை பரிசோதிக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். எனவே, மின் துறை உடனடியாக 'புதிய மீட்டர்- பழைய மீட்டர்- மின் கட்டண மாற்றம்' குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்து, மக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண வேண்டும். தவறான கணக்கீடு அல்லது மீட்டர் கோளாறு காரணமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அதை அடுத்த கட்டணத்தில் சரிசெய்து தர வேண்டும்.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்காமல் மின் துறை தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டால், தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
