வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
ADDED : ஏப் 10, 2026 06:44 PM
புதுச்சேரி:வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து, ரூ. 1.24 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட மூலக்குளம் சந்திப்பில் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, சந்தேகப்படும் படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 69 ஆயிரம் பதுக்கி வைத்திருந்தார்.
தொடர்ந்து, அவரை ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மூலக்குளத்தை சேர்ந்த ராஜேஷ், 40; என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், மங்கலம் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த நடராஜன், 60 என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
