ADDED : ஏப் 15, 2026 10:33 PM
பாகூர்: பாகூரில் கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் 43; கூலி தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி, பாகூரில் கோவில் திருவிழா சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் ரகளை செய்து கொண்டிருந்த, திருப்பனாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அவரது நண்பரை, சிவக்குமார் கண்டித்தார். ஆத்திரமடைந்த அவர்கள், சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அங்கு பொது மக்கள் திரண்டதால், அவர்கள் சென்று விட்டனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு சிவக்குமார், பாகூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பாலத்தின் கட்டையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த தனுஷ் அவரது நண்பர் இருவரும், முன் விரோதம் காரணமாக, சிவக்குமாரை திட்டி, தாக்கினர். தப்பியோட முயன்ற அவரை, விரட்டி விரட்டி அரிவளால் வெட்டினர். அவருக்கு கை, கால், போன்ற இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த சிவக்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வழக்கு பதிவு செய்து தனுஷ் 21, சித்தார்த் 27; ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
