ADDED : ஏப் 20, 2026 06:30 PM
புதுச்சேரி: வாலிபரை கடத்தி சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பெரியார் நகர், ஜாபர்பாய் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 27. இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள சாக்லேட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்காக ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
18ம் தேதி இரவு இந்திரா சதுக்கம் அருகே சுரேஷ் குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் வந்த தேவா, கோபி, கணேஷ் ஆகியோர் சுரேஷ் குமாரின் இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர்.
அங்கிருந்து 100 அடி சாலை வழியாக வில்லியனூர் அம்மா நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத வாட்டர் டேங்க் அருகே சுரேஷ் குமாரைக் கடத்திச் சென்றனர்.
அங்கு சுரேஷ் குமாரை, இரும்பு கம்பியால் தாக்கி, கத்தியால் தலையில் வெட்டினர். அங்கு வந்த கேசவன் மற்றும் துரை ஆகியோரும் சுரேஷ் குமாரை இரும்பு ராடால் தாக்கினர். படு காயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்ட கும்பல், கீழே விழுந்து அடிபட்டதாகச் சொல்ல வேண்டும். மீறி போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என, மிரட்டி விட்டுத் தப்பினர். படுகாயமடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார், தேவா, கணேஷ், கோபி, கேசவன் மற்றும் துரை ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
