ADDED : ஜூன் 17, 2025 12:43 AM
புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்கள், விதவையர்கள் கடந்த 2024-25ம் கல்வி ஆண்டிற்கான ஊக்குவிப்பு தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரகுமரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2024-25 கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகள், இளநிலை மற்றும் முதுநிலை கல்லுாரி படிப்பில் பல்கலை அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு ரொக்க வெகுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த ஊக்குவிப்பு தொகை பெற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தகுதியுடைய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்கள் அதற்கான விண்ணப்பத்தை நாளை 18 ம் தேதி முதல் ஜூலை 25ம் வரை முப்படை நலத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது முப்படை நலத்துறையின் வலைதளம் https://sainik.py.gov.in மூலமாக விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் முப்படை நலத்துறை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு வெகுமதி வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
காரைக்காலை சேர்ந்தவர்கள் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்திலும், மாகி மற்றும் ஏனாமை சேர்ந்தவர்கள் அந்தந்த மண்டல நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
