அடிப்படை கட்டமைப்பு இல்லாமல்..... சாத்தியமில்லை:காகிதத்தில் மட்டுமே நகரும் பட்டா மாற்றம் களத்தில் தீராத சர்வேயர் தட்டுப்பாடு
அடிப்படை கட்டமைப்பு இல்லாமல்..... சாத்தியமில்லை:காகிதத்தில் மட்டுமே நகரும் பட்டா மாற்றம் களத்தில் தீராத சர்வேயர் தட்டுப்பாடு
UPDATED : ஜூன் 02, 2026 11:50 PM
ADDED : ஜூன் 02, 2026 11:41 PM

புதுச்சேரி: தாசில்தார் அலுவலகங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, போதிய நில அளவையர்களை நியமித்தால் மட்டுமே, அரசின் புதிய உத்தரவு சாமானிய மக்களுக்கு முழுமையான பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுச்சேரியில் பட்டா மாற்றம் அல்லது நில உட்பிரிவு மாற்றம் செய்வது என்பது பொதுமக்களுக்கு நடைமுறையில் பெரும் இமயமலை சவாலாகவே இருந்து வருகிறது. வருவாய் துறை அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில், ஏன் ஆண்டுகணக்கில் நடையாய் நடந்தாலும் ஆட்கள் இல்லை, அவர் லீவு, இவர் லீவு என்ற வழக்கமான பதில்களே மிஞ்சுவதாகப் பொதுமக்கள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமக்களின் இந்த அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் இயக்குனரகம் அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு முக்கிய நடைமுறை மாற்றம் அமலுக்கு வந்துள்ளது: இனி நில உட்பிரிவு கோப்புகளை மறுசரிபார்ப்புக்காகத் தலைமையக இயக்குனரகத்திற்கு அனுப்பும் பழைய காலதாமத நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள துணை தாசில்தார் அலுவலகங்களிலேயே நில உட்பிரிவு மாறுதல்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படும். தாலுகா அலுவலகங்களிலேயே நில அளவீடு செய்யப்பட்டு, தொழில்நுட்பத் தணிக்கை முடிக்கப்பட்டு, நிலமகள் தரவுத்தளத்துடன் சரிபார்க்கப்பட்டு நேரடியாக இறுதி செய்யப்படும். பட்டா மாறுதல் முடிந்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அரசு கெடு விதித்துள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்... ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கின்றது. அரசின் இந்த நிர்வாகச் சீர்திருத்தம் காகித அளவில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தாலுகா அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்குக் கடும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தாசில்தார் அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கே ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு துணை சர்வேயர் மட்டுமே பணியில் இருக்கும் அவல நிலை நீடிக்கிறது. அவரிடம் பட்டா மாற்ற விண்ணப்பத்தைக் கொடுத்தால், பணிச்சுமையின் காரணமாக அவரும் எரிமலையாய் வெடிக்கும் சூழல் உருவாகிறது.இங்கே பாருங்கள், ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன. நான் ஒருவன் தான் 8 அல்லது 9 தொகுதிகளுக்கும் நில அளவை செய்ய ஓட வேண்டும். அதனால் உடனடியாகப் பட்டாவை எதிர்பார்க்காதீர்கள், போய் வாருங்கள் என்று விரக்தியுடன் பொதுமக்களை அனுப்பி வைக்கும் நிலையைத் தாலுகா அலுவலகங்களில் பரவலாகப் பார்க்க முடிகிறது.-- எங்கே முட்டுக்கட்டைதாசில்தார் அலுவலகங்களில் பட்டா மாற்றம் என்பது இரண்டு வகைகளில் கையாளப்படுகிறது. தனிப்பட்டா மாற்றத்தில் சர்வேயர்களுக்குப் பெரிய அளவில் வேலை இருக்காது. ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதாக முடிந்துவிடும். உட்பிரிவு பட்டா மாற்றம் ரொம்ப முக்கியமானது.நிலத்தைப் பிரித்து அளக்க வேண்டியிருப்பதால், இதில் சர்வேயர்களின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாதது. தற்போது தாலுகா அலுவலகங்களில் தனிப்பட்டாவை விட, நில உட்பிரிவு கேட்டுத்தான் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.போதிய எண்ணிக்கையில் சர்வேயர்கள் இல்லாதபோது, அரசு 60 நாட்கள் கெடு விதித்தாலும் இந்த உட்பிரிவு பட்டா மாற்றம் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது.--தீர்வு என்ன..அரசின் நல்லெண்ணம் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், உடனடியாகக் கீழ்வரும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பி, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திற்கும் மக்கள் தொகைக்கு ஏற்பப் போதிய சர்வேயர்களை நியமிக்க வேண்டும். நில அளவை செய்த விவரங்களை உடனுக்குடன் கணினியிலும், நிலமகள் மென்பொருளிலும் பதிவேற்றம் செய்யத் தேவையான அதிவேக இணையம் மற்றும் கணினி வசதிகளைத் தாலுகா அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தாமல், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உத்தரவுகளை மட்டும் பிறப்பித்தால், அது பெயரளவு சீர்திருத்தமாகவே முடியும். இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே, பட்டா கேட்டுப் பல ஆண்டுகளாகத் தவம் கிடக்கும் சாமானிய பொதுமக்களின் துயர் தீரும்.
