/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிமேடு சாலையில் பேனர்கள் ஆக்கிரமிப்பு
/
கோரிமேடு சாலையில் பேனர்கள் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 11, 2025 06:20 AM

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி: கோரிமேடு சாலையில் சுப நிகழ்ச்சிக்காக வரிசையாக வைத்துள்ள பேனரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர்.
புதுச்சேரி நகரின் சாலைகள் ஆக்கிரமிப்பு, தாறுமாறாக நிறுத்தி வைக்கும் வாகனங்களால் நெரிசல் நிலை தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தினசரி சாகசம் செய்வதுபோல் அச்சத்துடன் வாகனத்தை ஒட்டிச் செல்கின்றனர்.
மேலும், பெருகி வரும் பேனர் கலாசாரம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்தது. கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது, நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்த பின்பே பேனர் கலாசாரம் சற்று ஓய்ந்து இருந்தது.
ஆனால், திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு என சுப நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தலைவர்களை வரவேற்று, சாலையோரம் மற்றும் சென்டர் மீடியன்களில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் அதிகரிக்க துவங்கி விட்டது.
தட்டாஞ்சாவடியில் நடக்கும் என்.ஆர்.காங்., பிரமுகர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக, ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு வரை, சென்டர் மீடியன்களில் பள்ளம் எடுத்து கட்சி கொடி கம்பங்களும், வரிசையாக பேனர்களும் வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள், பேனர் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். கட்சி கொடி கம்பங்கள் நடுவதற்காக சென்டர் மீடியனில் பள்ளம் தோண்டுவதால், மின் கேபிள்கள் சேதமடைந்து மின் விளக்குகள் பழுதாகி விடுகிறது. சில பேனர்கள் சாலையில் விழுந்து கிடக்கிறது.
கோரிமேட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளதால், அந்த சாலை வழியாக அலுவலகம், வீட்டிற்கு செல்கின்றனர். ஆனால், அந்த அதிகாரிகள் பேனர் வைத்துள்ளதை கண்டு கொள்ளாமல் செல்வது வேதனையாக உள்ளது.

