மாநில முன்னேற்றத்திற்கான ‘பட்ஜெட்’ என்.ஆர்.காங்., ஜெயபால் பாராட்டு
மாநில முன்னேற்றத்திற்கான ‘பட்ஜெட்’ என்.ஆர்.காங்., ஜெயபால் பாராட்டு
ADDED : ஆக 25, 2026 05:51 PM
புதுச்சேரி: சிறந்த பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார் என, என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு மாநிலத்தின் முன்னேற்றம், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது என்பதை முதல்வர் ரங்கசாமி, தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது.
16வது சட்டசபை பட்ஜெட்டில் கடந்த நிதியாண்டை காட்டிலும் ரூ. 700 கோடிக்கு மேல் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி பெற்று தாக்கல் செய்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிர்வாக திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது.
அனைத்து குழந்தைகளுக்கும் போர்வை, கொசு வலை உள்ளிட்ட ரூ. 3,000 மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும் திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் லேட் வழங்குதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் வசதி ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் திருமண நிதி உதவித்தொகை ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 75 ஆயிரம், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவையின் மகளிர் திருமண நிதி உதவித்தொகை ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம், விதவையின் மறுமணத்திற்கான உதவித் தொகை ரூ. 75 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம், அருந்தியர் மற்றும் பழங்குடியின பெண்கள் திருமண நிதி உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சம் என அனைத்து திருமண நிதி உதவியை உயர்த்தி கொடுத்துள்ளது வரவேற்கதக்கது.
ஒட்டுமொத்தமாக சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பலன் பெரும் வகையிலும், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதியை மேம்படுத்தி, புதிய பாதையில் வளர்ச்சி அடையும் வகையில் அமைந்துள்ள பட்ஜெட்டை அளித்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
