/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி; புதுச்சேரியில் ஆரவாரத்துடன் துவங்கியது
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி; புதுச்சேரியில் ஆரவாரத்துடன் துவங்கியது
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி; புதுச்சேரியில் ஆரவாரத்துடன் துவங்கியது
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி; புதுச்சேரியில் ஆரவாரத்துடன் துவங்கியது
ADDED : அக் 10, 2025 06:46 AM

புதுச்சேரி: 'தினமலர்- பட்டம்' இதழின், இந்தாண்டிற்கான 'பதில் சொல்; பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டி நேற்று புதுச்சேரி ஏக்லவியா சர்வதேச பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது.
'தினமலர்- பட்டம்' இதழ் சார்பில், புதுச்சேரி, தமிழகம் பள்ளி மாணவர்களுக்காக 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி - வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டு மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 150 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது.
இதனை 'தினமலர்-பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சார்யா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.
இந்த மெகா வினாடி - வினா போட்டி, புதுச்சேரியில் முதல் பள்ளியாக தேங்காய்த்திட்டு ஏக்லவியா சர்வதேச பள்ளியில் தகுதி சுற்றாக முதல்நிலை தேர்வு நடந்து. இதில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 600 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், வரதட்சணை தடுப்பு ஆலோசனை குழு சேர்மன் வித்யா ராம்குமார், ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, முதல் நிலை தேர்வில் தேர்வு பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதிலளித்தனர். சில கேள்விகளுக்கு பார்வையாளர் மாடத்தில் இருந்த மாணவர்கள் பதில் சொல்லி பாராட்டுதலை பெற்றனர்.
இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி லோகிதா, ஏழாம் வகுப்பு மாணவர் ஹரிஸ் அணி முதலிடம் பிடித்து அசத்தியது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பிரசாந்த், தக் ஷன் அணி இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு நடக்கும் அடுத்த சுற்றுக்கு தேர்வானது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், வரதட்சணை தடுப்பு ஆலோசனை குழு சேர்மன் வித்யா ராம்குமார், ஆச்சார்யா உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர். இதேபோல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் 'தினமலர்-பட்டம்' இதழின் மெகா வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி, மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கிறது.
அறிவு பெட்டகமாக 'தினமலர்' பட்டம் இதழ் பள்ளி பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களையும் 'தினமலர் பட்டம் இதழ் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது. இந்தியாவில், வேறு எந்த மாநில மொழியிலும், இது போன்ற முயற்சி நடைபெறவில்லை. தமிழில் தான், முதன்முறையாக, இத்தகைய மாணவர் நாளிதழ், வெளிவருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் பீடுநடை போட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் பொது அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய, நுண்ணறிவை வளர்க்கும் வகையில், பட்டம் இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம் பெறுவதால் இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது.
அடுத்த போட்டிகள் எங்கே 'தினமலர்' மெகா வினாடி வினா போட்டி வரும் 14ம் தேதி கடலுார் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் பள்ளியிலும், 16ம் தேதி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியிலும், 23ம் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.