குண்டர் சட்ட திருத்த சட்ட முன் வரைவு நிறுத்தி வைப்பு
குண்டர் சட்ட திருத்த சட்ட முன் வரைவு நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 28, 2026 04:21 PM
புதுச்சேரி: சமூக விரோத செயல்பாடுகள் தடுப்பு திருத்த சட்ட முன்வரைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சமூக விரோத செயல்பாடுகள் தடுப்பு திருத்த சட்ட முன்வரைவு அமைச்சர் நமச்சிவாய் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.
இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுகொண்டதால், இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
செந்தில்குமார் (தி.மு.க): இச்சட்டத்தில் மணல் எடுப்பது குற்றமாக உள்ளது. ஆற்றோரம் குடியிருக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காக குறைந்த அளவில் மணல் எடுப்பர். இச்சட்டத்தில், மணலின் அளவு குறிப்பிடவில்லை. எனவே பொதுமக்கள் குற்றவாளிகளாக கருத வாய்ப்புள்ளது.
நேரு: குலுக்கல் பரிசும் இத்திட்டதில் இடம் பெறுகிறது. வணிகத் திருவிழாவின் போதும் குலுக்கல் முறையில் தான் பரிசு வழங்கப்படுகிறது. இதனால் வணிகர்கள் பாதிக்கப்படுவர். எனவே இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கார்த்திகேயன் (காங்): வீடு கட்டுவது அனைவரின் கனவு. வீடுகளை கட்டுவதற்கு சிலர் மணல் கொண்டு வருகின்றனர். கோவில்கள் கட்ட கூட அனுமதி பெற்று மணல் கொண்டு வரப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுவர். தீபாவளி குலுக்கல் என்ற பெயரில் சிலர் ஏமாற்றத்தான் செய்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்தமானவர்கள் பெயரில் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது.
அமைச்சர் நமச்சிவாயம்: தொடர் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீதுதான் குண்டர் சட்டம் பாயும். அவர்களை தொடர்ந்து கண்காணித்து தான் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பணத்தை சீட்டு பிடித்து பலர் ஏமாற்றுகின்றனர். இத்திட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வரப்படும்.
சபாநாயகர் அன்பழகன்: உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை கடிதமாக அளியுங்கள். முதல்வரின் ஒப்புதலுடன் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். அதுவரை சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்படும்.
