ADDED : ஆக 28, 2026 04:31 AM

வில்லியனுார்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் சாதாரண உடையில் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
அப்போது ஏரிக்கரை பகுதியில், கஞ்சா விற்பனை செய்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சதீஷ்19; பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 96 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, வில்லியனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசா்ர கஞ்சா விற்பனை செய்த சதீஷ், மீது வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
