முதியவரிடம் ரூ. 50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு
முதியவரிடம் ரூ. 50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 28, 2026 10:44 PM
அரியாங்குப்பம்: நிலம் தருவதாக கூறி முதியவரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, காமராஜ் நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 75. இவரிடம், தவளக்குப்பம் முத்து முதலியார் நகரை சேர்ந்த சிவக்குமார் மற்றும் இவரது மனைவி லதா ஆகியோர் கடந்த 2024ம் ஆண்டு கடனாக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
கொடுத்த கடனை தம்பதியிடம் பழனிசாமி கேட்டபோது, 1 கோடி ரூபாய் மதிப்பிலான காலி இடம் உள்ளது. அதை வாங்கி கொள்ளுங்கள் என, ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி பல தவணைகளாக 50 லட்சம் ரூபாயை பழனிசாமி சிவக்குமாரிடம் கொடுத்தார்.
சிவக்குமார் காட்டிய காலி இடத்திற்கான வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, அந்த இடம் பிரச்னைக்குறியதும், அதை பதிவு செய்ய முடியாது என தெரியவந்தது. அதையடுத்து, பணத்தை திருப்பி கேட்ட போது, கோர்டில் வழக்கு போட்டு கொள்ளுங்கள், வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும் என, பழனிசாமியிடம் சிவக்குமார் தம்பதி தெரிவித்து பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்து, பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில், சிவக்குமார், லதா மீது தவளக்குப்பம் போலீசார் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
