கொக்கு பார்க் சந்திப்பில் பரீட்சார்த்த தடுப்புகள்
கொக்கு பார்க் சந்திப்பில் பரீட்சார்த்த தடுப்புகள்
ADDED : ஜூன் 27, 2026 12:35 AM

புதுச்சேரி: கொக்கு பார்க் சந்திப்பில் பரீட்சார்த்த முறையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன.
புதுச்சேரி, கொக்குபார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 22 ம் தேதி சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவின் பேரில், பரீட்சார்த்த முறையில் வடக்கு போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுப்புகளை அமைத்தனர்.
இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில சமூக அமைப்பினர், அங்கு வந்து தடுப்புகளை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட பேரிகார்டுகளையும் அகற்றினர்.
அதனால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், கொக்குபார்க் சந்திப்பில், தடுப்புகள் அமைப்பது குறித்து, கோரிமேடு போக்குவரத்து சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைவரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து வரும், 29 ம் தேதி முதல், 10 நாட்களுக்கு, பரீட்சார்த்த முறையில் கொக்கு பார்க் சந்திப்பில் தடுப்புகள் அமைக்க அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., திவ்யா தலைமையில், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
