/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து தொழிற்சாலை அதிபர் கோர்ட்டில் சரண் சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரணை
/
போலி மருந்து தொழிற்சாலை அதிபர் கோர்ட்டில் சரண் சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரணை
போலி மருந்து தொழிற்சாலை அதிபர் கோர்ட்டில் சரண் சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரணை
போலி மருந்து தொழிற்சாலை அதிபர் கோர்ட்டில் சரண் சிறப்பு புலனாய்வு குழு காவலில் எடுத்து விசாரணை
ADDED : டிச 11, 2025 06:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்த போலி மருந்து தொழிற்சாலை அதிபர் உள்ளிட்ட இருவரை, சிறப்பு புலனாய்வு குழுவினர், காவலில் எடுத்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
பிரபல சன்பார்மா நிறுவனம் அளித்த போலி மருந்து புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன், பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ராணா, மெய்யழகன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், போலி மருந்து தயாரித்த குருமாம்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்த மூன்று குடோன்களில் சோதனை நடத்தி ரூ.40 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
போலி மருந்து தொழிற்சாலை அதிபரான ராஜா, குடோன் உரிமைதாரரான விவேக் ஆகியோர் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அதே நேரத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று திருபுவனை பாளையத்தில் உள்ள லார்வன் தொழிற்சாலை, ராஜாவின் வீடு, மருந்து குடோன்கள், புதுச்சேரி செட்டி வீதியில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள், ரூ.140 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரம், ரூ.450 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை, வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள், 18 லட்சம் ரொக்கம், பல கோடி சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
இந்த போலி மருந்து விவகாரம் குறித்து கவர்னர் உத்தரவின்பேரில், எஸ்.பி., நல்லான் கிருஷ்ணராய பாபு தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை துவக்கி உள்ளனர். இக்குழுவினர், ராஜா, விவேக் ஆகியோரின் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மருந்து தரக்கட்டுப்பாட்டு துறையினர், ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதனை அறிந்த, தலைமறைவாக இருந்த ராஜா, விவேக் ஆகியோர் நேற்று காலை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால் முன் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும், நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, ரகசிய இடத்தில் வைத்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.
அதனால், இந்த போலி மருந்து விவகாரத்தில் விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

