பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி: உறவினர் கைது
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி: உறவினர் கைது
ADDED : ஆக 16, 2026 05:22 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம், வீடு கட்டி தருவதாக கூறி ரூ.1.50 கோடி மோசடியில் ஈடுபட்ட உறவினரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கிருஷ்ணா நகர், 9வது குறுக்குத் தெருவை சேர்ந்த ராஜன், 52; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். தாய் மற்றும் தங்கையுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு ராஜன் புதுச்சேரிக்கு வந்தபோது, புதுச்சேரியில் இடம் வாங்கி வீடு கட்டும் ஆசை உள்ளதாக, அவரது சித்தி மாலாவிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, மாலாவின் மகள் பவானி, மருமகன் அமிர்தராஜ் ஆகியோர், அரியாங்குப்பத்தில் காலி இடம் இருப்பதாகவும், அந்த இடத்தை வாங்கினால் வீடு கட்ட நாங்கள் உதவியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய ராஜன், அரியாங்குப்பத்தில் 1430.5 சதுர அடி உள்ள காலிமனை வாங்க ரூ.35 லட்சம் பேசப்பட்டு முன்பணம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற ராஜன் குடும்பத்தினர், கொரோனா காரணமாக புதுச்சேரிக்கு வர முடியவில்லை. அதனால், அந்த இடத்தை பவானி பெயரில் தற்காலிகமாக கிரயம் செய்துகொள்ளும்படியும், தான் ஊருக்கு வந்த பிறகு தனது பெயரில் மாற்றிக்கொள்வதாகவும் ராஜன் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அந்த இடம் பவானி பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு, ரூ.1 கோடியே 50 லட்சம் வரையில், மாலா குடும்பத்தாருக்கு, பிரான்சில் இருந்து வங்கி மூலம் ராஜன் அனுப்பி வைத்துள்ளனர். வீடு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டு புதுச்சேரி வந்திருந்த ராஜன், தனது சித்தி மாலா குடும்பத்தினரிடம் வீட்டை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டார். ஆனால், மாலா அவரது மகள் பவானி, மருமகன் அமிர்தராஜ் ஆகியோர் வீட்டை ராஜன் பெயருக்கு மாற்றித் தராமல் அலைகழித்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த 2023 அக்டோபர் மாதம் ராஜனின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த அமிர்தராஜ், பவானி மற்றும் மாலா ஆகியோர், வீட்டைத் திருப்பி எழுதித்தர முடியாது எனக் கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மாலா, பவானி, அமிர்தராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய அரியாங்குப்பத்தை சேர்ந்த அமிர்தராஜ், 49; என்பவரை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
