ADDED : செப் 11, 2026 11:43 PM
பாகூர்: பாகூர் அருகே காஸ் சிலிண்டர் வெடித்து, தகர ஷெட் வீடு எரிந்தது.
கடலுார், உப்பளவாடியை சேர்ந்தவர் சையத் அலி, 78. இவர் தற்போது விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை, பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு அருகே உள்ள இவரது மனையில் சிறிய தகர ஷெட் அமைத்து அங்கேயே வசித்தபடி டீ கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7:30 மணியளவில் சையத் அலி காஸ் அடுப்பில் உணவு சமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காஸ் சிலிண்டர் தீ பிடித்து எரிந்துள்ளது.
உடனே அவர் வெளியே ஓடி வந்து கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து தீ ஷெட் முழுதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த சாமான்கள், ஆவணங்கள், ஸ்கூட்டர் என, அனைத்தும் தீக்கிரையானது. தீ விபத்து குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
