/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உளுந்துார்பேட்டை அருகே கோர விபத்து; ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் பலி
/
உளுந்துார்பேட்டை அருகே கோர விபத்து; ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் பலி
உளுந்துார்பேட்டை அருகே கோர விபத்து; ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் பலி
உளுந்துார்பேட்டை அருகே கோர விபத்து; ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் பலி
ADDED : செப் 25, 2024 11:34 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில், ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 21; டிரைவர். இவர், மகேந்திரா மேக்ஸ் கேப் வேனில், அப்பகுதியை சேர்ந்த 23 பேரை கடந்த 23ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.
அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2:30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர மரத்தில் வேகமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில், வேனில் பயணித்த ராணிப்பேட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன், 52; மகேந்திரன் மகன் சக்தி, 20; செல்வம்,50; துரை,43; ராமலிங்கம்,50; ரவி,60, ஆகிய ஆறு பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வேன் டிரைவர் வசந்தகுமார் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநாவலுார் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்தில் காயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் மனைவி தனம்,50; நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, இன்ஸ்பெக்டர் இளையராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்து குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேன் டிரைவர் ஓய்வின்றி, துாக்கக் கலக்கத்தில் அசுர வேகமாக ஓட்டியதால், விபத்து நேர்ந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விபத்தில் காயமடைந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு அலைகழிப்பு
விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம், 'இறந்தவர்களின் உடல்களை இங்கே பிரேத பரிசோதனை செய்ய முடியாது. சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என கூறினர்.
போலீசார், விபத்து நடந்த செரத்துனுாரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 32 கி.மீ., தொலைவிலும், கள்ளக்குறிச்சி மருத்துவமனை 63 கி.மீ., தொலைவில் உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற உடனடியாக இங்கு கொண்டு வந்தோம். காயமடைந்தவர்களை வெகுதொலைவு அழைத்து செல்லும் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது' என்றனர்.
மருத்துவமனை நிர்வாகமோ, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியாது எனக்கூறி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பியது. காயமடைந்தவர்களுக்கு மட்டும் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை அளித்தனர்.
மாவட்ட பிரச்னையால் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அலைகழிக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.