ADDED : செப் 04, 2026 11:23 PM
புதுச்சேரி: கவர்னர், முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன்:: தாய், தந்தையை அடுத்து குழந்தைகளுக்கு கல்வியோடு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்து அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் அர்ப்பணிப்பு கொண்டவர்கள் ஆசிரியர்கள். அறிவியல் சிந்தனையோடு மனிதநேய பண்புகளை சொல்லிக் கொடுத்து, ஒற்றுமை, நாட்டுப்பற்று, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்த்து ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி இளைய சமுதாயத்தை வழிநடத்தும் மகத்தான பணியினை செய்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
முதல்வர் ரங்கசாமி:: வளமான, ஆரோக்கியமான மற்றும் சிந்தனை திறன்மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், படைப்பாற்றல், சிந்திக்கும் திறன், மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்பு போன்ற உயர்ந்த பண்புகளை ஆசிரியர்கள் விதைக்கின்றனர்.
மாணவர்களின் அறிவார்ந்த, திறமையான, பொறுப்புணர்வுள்ள தலைமுறையை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபத்திக் கொண்டுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின வாழ்த்துகள்.
அமைச்சர் நமச்சிவாயம்:
கல்வி என்பது மனிதனை அறிவிலும், பண்பிலும் உயர்த்தும் அழியாத செல்வம். அத்தகைய அழியா செல்வத்தை தலைமுறைகளுக்கு வழங்கும் உன்னதமான பணியை ஆசிரியர்கள் ஆற்றி வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம், நற்பண்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
இதேபோல், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர், அரசு கொறடா ஆறுமுகம், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க., அமைப்பாளர் சிவா, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் உட்பட பலர் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
