ADDED : ஆக 15, 2026 11:44 PM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளிலும், 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
கைக்கிலப்பட்டு, அரசு பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான குடிநீர், பஸ் நிறுத்த நிழற்குடை, சிமெண்ட் களம், வடிக்கால் வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், துறைவாரியாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை அகற்றும் போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்து கிராமங்களை துாய்மையாக வைத்து இருப்பேன் என அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
