/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
/
இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
ADDED : ஜூலை 23, 2025 01:29 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், சொத்து பிரச்னையில் இந்து முன்னணி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி, சித்தானந்தா நகரை சேர்ந்தவர் துரை, 48; இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். இவர் கனகன் ஏரி சாலையில் பகவான் பெயரில் மணல், ஜல்லி விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு, ரேகா என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
துரையின் வீட்டில் நடந்து வரும் கட்டுமான பணிக்காக, நேற்று மதியம் 2:30 மணியளவில் தனது விற்பனை நிலையத்தில் இருந்த மணலை ஏற்றி செல்ல பைக்கில் வந்துவிட்டு, அங்கிருந்த மினி வேனில் மணலை ஏற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், விற்பனை நிலையத்திற்கு உள்ளே சென்று, நுழைவு வாயிலை மூடிவிட்டு, அங்கிருந்த துரையை கத்தியால் வெட்ட முயன்றது. அவர்களிடம் சத்தம் போடப்படி தப்பி ஓட முயன்ற துரையை, அந்த கும்பல் துரத்தி சென்று, தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துரை இறந்தார். துரை இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், வம்சிதர ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமரன், கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின், துரை உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட துரையின் மனைவியான ரேகாவின் தந்தை திருவேங்கடம், ரேகாவின் தாய் செல்வி இறந்த பிறகு, இரண்டாவதாக சித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவரிடம் இருந்த சொத்துகளை முதல் மனைவியின் குழந்தையான ரேகாவிற்கும், 2வது மனைவிக்கும் சரிபாதி எழுதி கொடுத்தார். அதில், 2வது மனைவிக்கு 4 குழந்தைகள் என்பதால், அவர்கள் ரேகாவிற்கு எழுதி கொடுத்த சொத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதனால், ரேகா குடும்பத்தினருக்கும், 2வது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே, ரேகா குடும்பத்தினர் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில், உள்ள வீட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அந்த வீட்டின் கட்டுமான பணிக்காக மணல் எடுத்து செல்ல வந்தபோது, துரை மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், 2வது மனைவியின் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர்.
அதனை உறுதி செய்யும் வகையில், அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்து முன்னணி நிர்வாகி துரை வெட்டி கொலை செய்யப்பட்ட தகவலறிந்த மாநில செயலாளர் சுனில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து, துரையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளியை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
போலீசார் அலட்சியத்தால்
கொலை நடந்ததா?
கனகன் ஏரி மணல், ஜல்லி விற்பனை நிலையத்தில் கொலை செய்யப்பட்ட துரை கடந்த சில தினங்களுக்கு முன், இரு குடும்பத்தினர் இடையே நிலவி வரும் சொத்து பிரச்னை காரணமாக, எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அதனை சாதாரணமாக எடுத்து, கொண்டு அதன்மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், போலீசாரின் அலட்சியத்தால் தான் துரை கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.