/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டல் வடிவில் வரலாற்று ஆவணங்கள்
/
டிஜிட்டல் வடிவில் வரலாற்று ஆவணங்கள்
ADDED : ஏப் 17, 2026 05:13 PM
புதுச்சேரி: பழஞ்சுவடி ஆவணங்கள் கணினி மயமாக்குதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக புதுச்சேரி கலை பண்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
வரலாற்று ஆவணங்களை உயர் தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில், ஆவணப்படுத்த தேசிய அளவிலான பணிகளை மேற்கொள்ள, இந்திய அரசின் கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நாடு தழுவிய தேசிய பழஞ்சுவடிகள் கணினி மயமாக்குதல் முயற்சியாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அருங்காட்சியகங்கள், நுாலகங்கள் மற்றும் தனியார் சேமிப்புகளில் உள்ள பழஞ்சுவடிகளை ஆய்வு செய்தல், பதிவேற்றல், பாதுகாத்தல், டிஜிட்டல் வடிவில் மாற்றுதல் மற்றும் பொதுமக்களும் அணுகக்கூடியதாக இருப்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில், புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்த அரசு அதிகாரிகள், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட இரு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுதும் உள்ள பழஞ்சுவடிகளை முறைப்படுத்தும் நோக்கில், நம் மாநில மொழிகளில் உள்ள புராதன விலை மதிப்பற்ற பழஞ்சுவடிகளை முழுமையாக கணினி மயமாக்குவது இதன் நோக்கமாகும். இந்த திட்டம், தொழில்நுட்ப அடிப்படையிலான முறையில் இந்தியாவின் பழஞ்சுவடி பாரம்பரியத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், பொதுமக்களும், வரும் சந்ததியினரும் பயன்படுத்தவும் வழி செய்யும்.
இந்த முயற்சியில், பொதுமக்களும், தன்னார்வலர்களும் பங்கேற்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச (அறிவார்ந்த பாரதம்) செயலியை பதிவிறக்கம் செய்து, (https://gyanbharatam.com) தங்களிடம் ஏதேனும் தொன்மையான பழஞ்சுவடிகள், ஆவணங்கள் (பிரஞ்சு நிர்வாக அமைப்புக்கு முந்தைய) இருப்பின், அவற்றை பதிவேற்றம் செய்து இந்த தேசப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

