/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சரவையில் எனக்கு கடைசி இடமா? சாய் சரவணன்குமார் திடீர் போர்க்கொடி
/
அமைச்சரவையில் எனக்கு கடைசி இடமா? சாய் சரவணன்குமார் திடீர் போர்க்கொடி
அமைச்சரவையில் எனக்கு கடைசி இடமா? சாய் சரவணன்குமார் திடீர் போர்க்கொடி
அமைச்சரவையில் எனக்கு கடைசி இடமா? சாய் சரவணன்குமார் திடீர் போர்க்கொடி
ADDED : நவ 25, 2024 05:03 AM
புதுச்சேரி : அமைச்சர் சாய் சரவணன்குமார், தன்னிடம் பறிக்கப்பட்ட இலாகாக்களை கேட்டு திடீரென போர்க்கொடி உயர்த்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில், என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம், சாய்சரவணன் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அமைச்சர்களுக்கான இலாகா மாற்றி அமைக்கப்பட்டது. அதில், சாய் சரவணன்குமார் கவனித்து வந்த குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிதாக பொறுப்பேற்ற திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. மேலும், சாய் சரவணன் குமார் வசம் இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகர அடிப்படை சேவை துறை முதல்வர் ரங்கசாமிக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் சாய் சரவணன்குமாரிடம் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் ஆகிய மூன்று துறைகள் மட்டுமே உள்ளது. இதனால், அதிருப்தியடைந்த சாய்சரவணன்குமார் கூடுதல் இலாகாக்கள் பெற பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறார். இறுதிகட்டமாக இலாகாக்களை பெற்றுத் தர வேண்டி மாநிலத்தில் உச்ச அதிகார மையத்திடம் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது இலாகாக்களை எதற்காக மாற்றினீர்கள் என கவர்னர் மற்றும் முதல்வரிடம் கேட்டு வருகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது உரிமையை கேட்க எனக்கு உரிமை உள்ளது.
அமைச்சரவையில் நான் சீனியர். ஆனால், எனக்கு பிறகு அமைச்சரவையில் நியமிக்கப்பட்டவருக்கு, எனக்கு முந்தைய இடத்தை கொடுத்து, என்னை கடைசி இடத்தில் வைத்துள்ளனர். நான் கடைசி இடத்தில் தான் இருக்க வேண்டுமா?
இதுகுறித்து சபாநாயகரிடம் கேட்டதற்கு, முதல்வரிடம் பேச சொல்கிறார். ஆனால் இதுவரையில் பதில் வரவில்லை. துறை மாற்றம் குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டுள்ளேன். அதற்கான காரணத்தை கேட்கிறேன். அப்போதுதான், என்மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ள முடியும்.
கட்சி தலைவர் பதவி கூட நான் கேட்டிருந்தேன். கட்சி சொன்னால் அதற்கும் கட்டுப்படுவேன். கொடுத்தால் அதற்கான வேலையை சரியாக செய்வேன்.
நான் அரசியல் பின்புலத்துடன் வரவில்லை. நேரடியாக பா.ஜ., வில் இணைந்து களத்தில் இறங்கினேன். எனது சொத்துக்களை விற்று, மக்களின் செல்வாக்கை பெற்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.
இலாகா மாற்றம் முதல்வரின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலையில், அமைச்சர் இந்த திடீர் போர்க்கொடி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.