/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பாரில் கூலித்தொழிலாளி அடித்து கொலை
/
தனியார் பாரில் கூலித்தொழிலாளி அடித்து கொலை
ADDED : பிப் 04, 2026 05:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாரில் ஏற்பட்ட தகராறில் கார்பென்டரை அடித்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் மகன் வினோத் (எ) வினோத் குமார் 40; கார்பென்டர். இவர் சென்னையில் வேலை செய்து விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
நேற்று அவர் தனது நண்பர்களுடன், புதுச்சேரி மாநிலமான ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த துருவை காலனியை சேர்ந்த சிலருக்கும், வினோத்திற்கும் போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த துருவையை சேர்ந்த கும்பல் வினோத்தை சராமரியாக தாக்கியது. அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவலறிந்த தன்வந்தரி நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வினோத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து வடக்கு எஸ்.பி., ரகுநாயகம் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து தன்வந்தரி நகர் போலீசார் வழக்கு பதிந்து, துருவை காலனியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தனியார் பாரில் வினோத்தை, ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிராமத்திற்கு மத்தியில் உள்ள தனியார் பாரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

