குளங்கள் துார் வாரும் பணி :உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆய்வு
குளங்கள் துார் வாரும் பணி :உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆய்வு
UPDATED : ஜூலை 30, 2026 07:09 PM
ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துகளில் சி.எஸ்.ஆர்., நிதியுதவியின் கீழ் துார்வாரப்படும் குளங்களை உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் ஆய்வு செய்தார்.
வரும் மழை காலத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில், நீர்நிலைகளை துார்வாரி பராமரிக்க பொதுப்பணித்துறை, நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, உள்ளாட்சித் துறை இயக்குனர் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள குளங்களை துார்வாரி குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, நடைமேடை மற்றும் இருக்கை வசதிகள் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதன்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருபுவனையில் 2, கூனிச்சம்பட்டில் 3, கொடாத்துார், காட்டேரிக்குப்பம் கிராமத்தில் தலா ஒரு குளங்கள் தேர்வு செய்யப்பட்டு தனியார் கம்பெனியின் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், குளங்கள் துார்வாரும் பணியினை உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆதர்ஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில், மழைக்காலம் துவங்குவதற்கு முன் துார்வாரும் பணிகளை விரைந்து முடித்து குளங்களை அழகுப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது. மண்ணாடிபட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், தனியார் கம்பெனி நிர்வாகிகள் அருண்குமார், வீரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
