‘ஸ்மார்ட் மீட்டர்’ செயலியில் தினசரி மின் நுகர்வை அறியலாம் கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் தகவல்
‘ஸ்மார்ட் மீட்டர்’ செயலியில் தினசரி மின் நுகர்வை அறியலாம் கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் தகவல்
ADDED : ஆக 22, 2026 11:22 PM
புதுச்சேரி: ஸ்மார்ட் மீட்டர் சந்தேகங்களுக்கு மின் துறை விளக்கம் அளித்துள்ளது.
மின் துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை, 1.7 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, தானியங்கி முறையில் மின் கணக்கீடு செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட அனைத்து நுகர்வோர்களின் கட்டண முறை எவ்வித மாற்றமுமின்றி தற்போது உள்ள போஸ்ட் பெய்டு முறையிலேயே தொடர்வதுடன், சரியான மற்றும் குறித்த நேரத்தில் மனித பிழைகள் இன்றி விநியோகப்பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நுகர்வோர்கள் தங்களது மின் பயன்பாட்டினை துல்லியமாக அறிய Puducherry Minshakthi அல்லது Puducherry Urja என்ற மொபைல் செயலியின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் மீட்டர் நிறுவும் போது கொடுத்த மொபைல் நம்பரை பயன்படுத்தி ஓ.டி.பி., மூலம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து, தங்களது தினசரி மின் பயன்பாட்டை தெரிந்துக்கொள்ளாம்.
நுகர்வோர்களின் சந்தேகத்தைப் போக்கவும் துல்லியத்தன்மையை உறுதி செய்யவும், சந்தேகம் எழுந்த சுமார் 100 நுகர்வோர்களின் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டருடன் செக் மீட்டர் பொருத்தி, மீட்டரின் துல்லியத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. விருப்பப்படும் நுகர்வோர்களுக்கு செக் மீட்டர் நிறுவப்பட்டு சந்தேகங்களை போக்குவதற்கு மின் துறை தயாராக உள்ளது.
மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் சம்மதமான சந்தேகங்களுக்கு www.electricity.py.gov.in இணையத்தளத்தில் ஸ்மார்ட் மிட்டர் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம். அந்தந்த பகுதி இயக்குதலும் பராமரித்தல் பிரிவுகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
