ADDED : ஜூலை 13, 2026 02:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் அசுர வேகத்தில்செல்லும் வாகனங்களால், சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா வருமானத்தையே அதிகளவில் நம்பி உள்ளது. இதற்காக புதுச்சேரியில் பல கடற்கரைகள் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதில் முக்கியமாக காந்தி சிலை அமைந்துள்ள கடற்கரைக்கு பொது மக்கள் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டுசுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் கடற்கரையில் கூட்டம் அலைமோதும், இதனால், கடற்கரை சாலையில் வானங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சாலையின் இருபுறமும் மற்றும் இணைப்பு சாலைகளிலும் பேரிகார்டு அமைத்து, வாகனங்கள் செல்ல போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக கடற்கரையின் அழகை ரசித்து வந்தனர். மேலும் கடற்ரையில் காலை, மாலை நேரங்களில் உள்ளூர் பொதுமக்களும் வாக்கிங் சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் சிலர் சாலையில் உள்ள பேரிகார்டுகளை தள்ளி வைத்து விட்டு கடற்கரை சாலையில் பைக் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்கின்றனர்.
தங்கள் சாகசங்களை வெளிபடுத்த சிலர் செய்யும் செயல், மற்றவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் சிவப்பு நிற கார் ஒன்று அசுர வேகத்தில் கடற்கரை சாலையில் செல்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அலறி அடித்து சிதறி ஓடினர். சுற்றுலா வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ள புதுச்சேரிக்கு, இது போன்ற சம்பவங்கள் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே போலீசார் கடற்கரை சாலையில் இரவு நேரங்களில், சாகச பயணம் மேற்கொள்ளும் வானங்களால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
