புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்: முதல்வருக்கு மாஜி அமைச்சர் பாராட்டு
புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்: முதல்வருக்கு மாஜி அமைச்சர் பாராட்டு
UPDATED : ஆக 26, 2026 05:36 PM
ADDED : ஆக 26, 2026 05:32 PM
புதுச்சேரி: 18வது பட்ஜெட் மூலம், புதுச்சேரி மக்களுக்கு நல்வாழ்வு தந்துள்ளதாக முதல்வர் ரங்கசாமிக்கு, முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;
முதல்வர் ரங்கசாமி அவர்கள் தாக்கல் செய்துள்ள 18வது பட்ஜெட், மக்கள் நலனையும், நல்வாழ்வு திட்டங்களையும், புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்த பட்ஜெட். புதுச்சேரியின் நீடித்த வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்பதற்கு இவரின் 18 ஆண்டு கால தொடர் முயற்சியே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு.
மக்கள் நலத்திட்டங்களுக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் ரூ. 2,202.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய், அரசு ஊழியர்களும் மாதம் முதல் தேதி உறுதியாக கிடைக்கும் சம்பளம் போலவே, அவரவர் வங்கி கணக்கில் போய் சேருகிறது.
2001ல் முதல்வராக பதவியேற்ற காலத்தில் துவங்கிய உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம், வீடு கட்டும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை உணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோருக்கு சிறப்பு நிதி போன்ற திட்டங்களை, 25 ஆண்டுகளாக தொடர்ந்து தடையில்லாமல் நிறைவேற்றி வரும் கால் நுாற்றாண்டு சாதனை, இந்திய தேசத்தின் எந்த முதல்வராலும் யாராலும் சாதித்து காட்ட முடியாத ஒன்றாகும்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, இந்த பட்ஜெட்டில் தொழிற்சாலை அனுமதி பெறுவதில் இருந்த அனைத்து தடையையும் நீக்கி, தொழிற்சாலைகளை பெருக்கி வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது.
விலைவாசி உயர்வின் பாதிப்பை தவிர்ப்பது அரசின் கடமை. அதற்கு ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு ஆகியவற்றை தருவதற்கும் பட்ஜெட்டில் ஓர் நல்ல அறிவிப்பாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
