நுாற்றாண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் திறப்பு
நுாற்றாண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் திறப்பு
ADDED : ஜூன் 26, 2026 03:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நுாற்றாண்டு பழமைவாய்ந்த கலங்கரை விளக்கம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கி, கலங்கரை விளக்கத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், செல்வகணபதி எம்.பி., விக்னேஷ் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக அதிகாரிகள், போலீஸ் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி வரலாற்று சிறப்புமிக்க மாநிலம். இங்கு பாரம்பரிய மிக்க பழைய கட்டடங்கள், தெருக்கள் உள்ளன. நம்முடைய கலங்கரை விளக்கம் பழமையான வணிக நிலை எப்படி இருந்தது என்பதை அறிவும் வகையில் இருக்கிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் உதவியோடு பழமையான கட்டடங்களை பாதுகாப்பதில் நமது அரசு கவனம் செலுத்தி வருகிறது.
சுற்றுலா வளர்வதால் நம்முடைய வருவாய் அதிகரித்து வருகின்றது. அவற்றை மேலும் உயர்த்த சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை உயர வேண்டும் என்பது அரசினுடைய எண்ணம். அதற்காக நம்முடைய அரசானது மத்திய அரசிடம் அதிக நிதியை கோரி இருக்கிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அதிக நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மத்திய அரசின் உதவி இல்லை என்றால் வளர்ச்சி என்பது குறைவாக இருக்கும். நல்ல கல்வி, மருத்துவம் , குடிதண்ணீர், உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். நிதி அமைச்சர் புதுச்சேரி மீது அக்கறை கொண்டவர்.இவ்வாறு அவர் பேசி னார்.
