/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 21, 2025 05:07 AM
புதுச்சேரி : ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அதிக லாபம் வரும் எனக் கூறி, ரூ.12 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகரை சேர்ந்தவர் அருள்குமார், 32; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2023ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தபோது, அங்கு பணியாற்றிய ரெட்டியார்பாளையம், மேரி உழவர்கரையை சேர்ந்த பழனிராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பழனிராஜன் தான் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதித்து வருவதாக தனது மொபைலில் இருந்த முதலீடு செய்து வந்த லாப கணக்கில் காட்டினார். மேலும், ரெட்டியார்பாளையத்தில் புதிதாக டிரேடிங் அலுவலகம் திறக்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால், வரும் லாபத்தை பிரித்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பிய அருள்குமார் கடந்த 2023-24ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சம் ரூபாயை டிரேடிங்கில் முதலீடு செய்ய பழனிராஜனிடம் வழங்கினார். அதன்பின் பழனிராஜன் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் எதையும் அருள்குமாரிடம் தரவில்லை. இதனால், சந்தேகமடைந்து அருள்குமார் விசாரித்தபோது, பழனிராஜன் வாங்கிய பணத்தை டிரேடிங்கில் முதலீடு செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அருள்குமார் அளித்த புகாரின் பேரில், பழனிராஜன் மீது முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.