தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை: தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை: தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு
UPDATED : ஆக 18, 2026 07:56 PM
ADDED : ஆக 18, 2026 05:23 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது சட்டசபையின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் நாளை (இன்று) 19ம் தேதி தனியார் ஓட்டலில் காலை 10 மணிக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடக்கிறது. முதல்வர் ரங்கசமி சிறப்புரையாற்றுகிறார். எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, சார்பு செயலர் சாந்தி, முன்னாள் பட்ஜெட் ஆபிசர் பொன்னுசாமி, சட்டசபை செயலர் தயாளன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
தேவைப்பட்டால், முதல்வரின் அனுமதி பெற்று டில்லி அழைத்து சென்று கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். சட்டசபை நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கடிதம் கொடுத்துள்ளார்.
வரும் சட்டசபை நிகழ்வுகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாபடப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்வார். புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படவில்லை என்றால், சட்டசபை புறக்கணிப்பு செய்வோம் என, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளது குறித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம் பேசுவேன்.
அவர்களின் கருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவேன். நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகரே சட்டசபை நிகழ்வுகளை நடத்தலாம். நிரந்தர சபாநாயகர் தேர்தல் குறித்து சட்டசபை செயலகத்தில் இருந்து கவர்னருக்கு கடிதம் போய் உள்ளது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும். சட்டசபை கூடும் அன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையாற்றுகிறார். அதன்பின், சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூடி பட்ஜெட் எத்தனை நாள் நடத்தப்படும் என முடிவு செய்யப்படும்.
இவ்வா அவர் தெரிவித்தார்.
