/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பீடு உயருகிறது: வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு
/
மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பீடு உயருகிறது: வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு
மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பீடு உயருகிறது: வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு
மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பீடு உயருகிறது: வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு
ADDED : ஏப் 08, 2025 03:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக சொத்து வழிகாட்டி மதிப்பினை உயர்த்தப்படாத சூழ்நிலையில், தற்போது புதிய வழிகாட்டி மதிப்பினை வெளியிடுவதற்காக அனைத்து பகுதிகளிலும் வருவாய் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் நிலம், மனை விற்கப்படும்போது, பத்திர பதிவு அலுவலங்களில் அரசுக்கு 10 சதவீத முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை, வளர்ச்சி பணிக்காக, பத்திர பதிவு துறையும், உள்ளாட்சி துறையும் 5 சதவீதம் என்ற விகிதத்தில் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன், பத்திரப்பதிவு துறை, ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு வெளியிட்டு வருகிறது.
நிலங்களின் விலை உயரும் போது அதற்கு ஏற்ப வழி காட்டி மதிப்பு உயர்த்தப்படுவது வழக்கம். புதிய வழிகாட்டி மதிப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிடும்.
இருப்பினும், தற்போது ஏப்ரல் மாதம் பிறந்து ஏழு நாட்கள் உருண்டோடியும் புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. வழக்கமாக, பிப்ரவரி மாதம் சொத்து வழிகாட்டி மதிப்பினை கணக்கிட குழு அமைக்கப்படும்.
மார்ச் மாதம் இக்குழு ஆய்வில் இறங்கி அறிக்கை தாக்கல் செய்யும். ஆனால் இதுநாள் வரை சொத்து வழிகாட்டியில் மதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் இந்தாண்டு சொத்து வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு குறித்து முடிவு செய்வதற்காக வருவாய் துறை மூலம் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு நடந்து வருகின்றது.
தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த பகுதி களிலும் நடந்த பத்திர பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, புதிய சொத்து வழிகாட்டி மதிப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பணி ஒருவார காலத்திற்குள் முடிந்ததும் முதல்வர் ரங்கசாமிக்கு கோப்பு அனுப்பப்பட உள்ளது. இக்கோப்பு கேபினெட்டில் வைத்து புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு சம்பந்தமாக முடிவெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பு கடந்த 2013-14ம் ஆண்டில் கடைசியாக உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 2016-17ம் ஆண்டு சொத்து வழிகாட்டி அதிகமாக உள்ளது என்று 25 சதவீதம் குறைக்கப்பட்டது.
அதன் பிறகு பல ஆண்டுகளாக சொத்து வழிகாட்டி மதிப்பு புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்படவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக புதுச்சேரியில் சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாமல் உள்ளது.
தற்போது, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு பட்ஜெட்டில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது.
இது வெற்று அறிவிப்பு என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றது. சொன்னதை செய்யும் அரசு எங்களுடையது.
புதிய திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்று முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்து வருகின்றார். பத்திர பதிவு துறையின் வருவாயை அதிகரித்து அரசின் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தலாம் என ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே 12 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு விரைவில் உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

