புதுச்சேரி விமான நிலையத்தில் சிறப்பு சேவை இயக்கம் துவங்கியது
புதுச்சேரி விமான நிலையத்தில் சிறப்பு சேவை இயக்கம் துவங்கியது
ADDED : செப் 17, 2026 09:03 PM

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தில் 24 நாட்களுக்கான சிறப்பு சேவை இயக்கம் துவங்கியது.
புதுச்சேரி விமான நிலையம், விமானப் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், சேவைத் தரத்தை உயர்த்தி சிறந்த உபசரிப்பு பண்பாட்டை வளர்க்கவும் யாத்ரி சேவா அபியான் எனும் சிறப்பு சேவை மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இம்முகாம் நேற்று துவங்கியது. புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் துவக்கி வைத்து, பயணிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அதிரடி நாட்டுப்புற நடனங்கள் பயணிகளைத் தாளம் போட வைத்தன. இன்னொரு பக்கம், பயணிகள் ஆர்வத்துடன் திரண்டு பிரதமருடன் செல்பி பூத்துகளில் போட்டோ எடுத்து மாஸ் காட்டினர்.
சுவச்ச பாத்ஷாலா திட்டத்தின் கீழ், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் சுவச்சதா ஞான யாத்திரை மூலம் கழிவு மேலாண்மை மையங்களை பார்வையிட்டனர். குறைத்தல், மீள்பயன்படுத்தல், மறுசுழற்சி செய்தல் என்ற பார்முலாவை மையமாக வைத்து, பழைய பொருட்கள் தானம் மற்றும் துாய்மை குறித்த விழிப்புணர்வு விவாதங்கள் நடந்தன.
இன்றைய ஸ்பெஷல்:: முதல் நாளின் வைப் முடிந்த கையோடு, இரண்டாம் நாளான இன்று 18ம் தேதி ஏர்போர்ட்டை பளபளக்க வைக்கும் தீவிரக் களப்பணிகளில் அதிகாரிகள் ஊழியர்கள் இறங்க உள்ளனர். விமான நிலைய அணுகு சாலைகள், நடைபாதைகள் மற்றும் என்ட்ரி பாயிண்டுகளில் உள்ள குப்பைகள், தேவையில்லாத அடைசல்கள் மொத்தமாக கிளீன் செய்யப்படவுள்ளன.
உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்த வளாகத்தையும் கூட்டு ஆய்வு செய்ய இருக்கிறார்கள். அப்போது கண்ணில்படும் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, முன்பு–பின்பு என போட்டோக்களில் ஆவணப்படுத்தப்படவுள்ளனர். பயணிகள் வந்து செல்லும் வாகன வழிகள் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
சுவர் ஓவியங்கள்:: மை–பாரத் தன்னார்வலர்களும், பள்ளி மாணவர்களும் இணைந்து வண்ண வண்ண சுவர் ஓவியங்கள் வரைந்து அசத்த காத்திருக்கிறார்கள். மொத்தத்தில், அக்., 10ம் தேதி வரை 24 நாட்களுக்கு பயணிகளுக்கு உலக தரம் வாய்ந்த, துாய்மையான அனுபவத்தை கொடுக்க ஏர்போர்ட் நிர்வாகம் தயாராகிவிட்டது.
