வில்லியனுாரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்: ரவிக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வில்லியனுாரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்: ரவிக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
UPDATED : ஆக 29, 2026 10:44 PM
ADDED : ஆக 29, 2026 10:41 PM

புதுச்சேரி: வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென, ரவிக்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது:
வில்லியனுார் தொகுதி ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். வில்லியனுாரில் நவீன வசதி கொண்ட மின்சார தகன மேடை அமைக்கவேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க வில்லியனுார் முக்கிய சந்திப்பு பகுதியில் சிசிடிவி கேமரா, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு மற்றும் ஜி.என் பாளையம் அய்யனார் கோவில் ஆகிய இடங்களில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
வில்லியனுார் மகளிர் கல்லுாரியை தரம் உயர்த்தி கூடுதல் பாடப் பிரிவுகளை துவங்க வேண்டும். பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எம்.டி.எஸ் ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும்.
மேலும் நீண்டகாலமாக இத்துறையில் உள்ள எப்.டி. சி.எல்.ஆர் ஊழியர்கள் அனைவரையும் எம்.டி.எஸ்., யாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
வில்லியனுாரில் தேரோடும் நான்கு மாட வீதிகளை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். கூடப்பாக்கம் சாலை ரயில்வே கேட் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பால பணியை விரைவில் துவக்க வேண்டும். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
