ADDED : ஜூன் 12, 2026 08:47 AM

புதுச்சேரி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், வேளாண்மை அறிவியல் நிலையங்களின் மண்டல பயிலரங்கு புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
பயிலரங்கை அரசு செயலர் யாசின்சவுத்ரி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 33 வேளாண் அறிவியல் நிலையங்களின் 2025-26ம் ஆண்டிற்கான செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், 2026- 27ம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் வரவேற்றார். தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் நரேந்திர பாபு, கால்நடை வளர்ப்பில் பண்ணை அளவிலான கள ஆய்வுகள் மற்றும் முதல்நிலை செயல்விளக்கங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்ரமணியன், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் கல்விசார் முன்னெடுப்புகள் குறித்து பேசினார்.விரிவாக்க கல்வி இயக்குநர் கோபாலகண்ணன், ராஜிவ்காந்தி கால்நடை கல்லுாரி முதல்வர் முருகவேல், வேளாண் இயக்குநர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேளாண் அறிவியல் நிலையங்களின் 'ஸ்பார்க் புல்லட்டின்' மாதாந்திர செயல்பாடுகளுக்கான கியூஆர்- குறியீடு வெளியிடப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி நன்றி கூறினார்.
தொடர்ந்து, பயிலரங்கு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
