ADDED : ஆக 17, 2026 11:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகாரமின்றி வாடகைக்கு விடப்பட்ட 34 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, போக்குவரத்து துறையிடம் ஒப்படைத்தனர்.
சீனியர் எஸ்.பி., திவ்யா அறிக்கை:
புதுச்சேரி போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறையுடன் இணைந்து வெள்ளை நிற பதிவெண் கொண்ட பைக்களை அங்கீகாரமின்றி வாடகைக்கு விடுவது தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தனியார் உரிமையாளர்கள், வாடகை வாகன நிறுவனங்களால் உரிய அனுமதியின்றி வாடகைக்கு விடப்படுவதும், தனியார் வாகனங்களாக பதிவு செய்யப்பட்டவை வணிக, வாடகைக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது.
அதன்படி, அங்கீகாரமின்றி வாடகைக்கு விடப்பட்ட, 34 பைக்குகள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், வாடகை பைக் உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பைக்குகளை வழங்கும்போது, ஹெல்மெட், அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க
அறிவுறுத்த வேண்டும்.
மேலும், போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறையின் அங்கீகாரமற்ற வாடகை வாகன இயக்கம் மற்றும் வாடகை பைக் விதிமீறல்கள் தொடர்பாக திடீர் சோதனை நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
