தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீரம்மனாக ரேணுகாதேவி அம்மன்

செங்கழுநீரம்மனாக ரேணுகாதேவி அம்மன்

செங்கழுநீரம்மனாக ரேணுகாதேவி அம்மன்


ADDED : ஆக 13, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜமதக்னி முனிவரின் தர்மபத்தினியான ரேணுகா தேவி, கணவரின் நித்திய பூஜைகளுக்காக தினமும் குளக்கரைக்குச் சென்று, தன்னுடைய பதிவிரதா தன்மையால் மணலிலேயே குடம் செய்து நீர் சுமந்து வருவது வழக்கம்.

அப்படியொரு நாளில், குளத்தில் நீர் முகக்கும்போது விண்ணில் பறந்து சென்ற கந்தர்வனின் அழகிய உருவம் தண்ணீரில் பிரதிபலித்தது. இவன் எவ்வளவு அழகாக இருக்கிறான் என்ற ஒரு கணம் எண்ண அலை ரேணுகா தேவியின் மனதிற்குள் தோன்றி மறைய அடுத்த நொடியே அந்த மண்குடம் உடைந்து சிதறியது. மனத்துாய்மை சற்றே மாறியதால் அவளது பதிவிரதா சக்தி குறைந்து, மண்குடம் செய்ய முடியாமல் தவித்தாள்.

ஞானக்கண்ணால் இதையறிந்த ஜமதக்னி முனிவர் கடுங்கோபம் கொண்டார். கற்பு நெறி பிசகிய அவளுக்கு வாழ் உரிமையில்லை. அவள் தலையைக் கொய்யுங்கள் எனத் தன் மகன்களுக்கு ஆணையிட்டார். முதல் மூவரும் தாயைக் கொல்ல மறுக்க, கடைசி மகனான பரசுராமன் தந்தையின் சொல்லைத் தட்டாமல் கையில் வாளுடன் புறப்பட்டான்.

கோபத்திலிருந்து தப்ப ஓடிய ரேணுகா தேவி, குளக்கரையில் இருந்த ஒரு வண்ணாத்தியின் குடிசையில் புகுந்து அழுக்குத் துணி மூட்டைக்குப் பின் பதுங்கினாள். பரசுராமன் வருவதைக் கண்ட அந்த வண்ணாத்திப் பெண், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் ரேணுகா தேவியைப் பாதுகாக்க வாசலில் மறித்து நின்றாள். கோபத்திலிருந்த பரசுராமன் முதலில் வண்ணாத்தியின் தலையைத் துண்டித்தான். பின் வெளியே வந்த தாய் ரேணுகா தேவியின் தலையையும் வெட்டி வீழ்த்தினான்.

செய்தியைத் தந்தையிடம் கூற, மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், மகனே உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார். பரசுராமனோ, எனக்கு என் தாய் உயிருடன் மீண்டும் வேண்டும் எனக் கேட்டான்.

முனிவர் ஒரு புனித நீரை கொடுத்து, வெட்டுண்ட தலையையும் உடலையும் சேர்த்து வைத்து இந்த கமண்டல நீரைத் தெளி என்றார். பதற்றத்தில் ஓடிவந்த பரசுராமன், வண்ணாத்தியின் உடம்பில் தாய் ரேணுகா தேவியின் தலையையும், தாயின் உடம்பில் வண்ணாத்தியின் தலையையும் மாற்றி வைத்து நீரைத் தெளித்துவிட்டான். இருவருமே உயிர் பெற்றனர்.

நடந்ததை அறிந்த ஜமதக்னி முனிவர், தலை மாறியதால் நீ இனி மாரியம்மன் என்ற பெயரில் அகிலமெல்லாம் போற்றப்படுவாய். உலகின் தலைசிறந்த அருட்சக்தியாக உருவெடுத்து மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாய் என வரம் அளித்தார்.

அப்போது ரேணுகா தேவி, ‘நாதா எனக்குப் பாதுகாப்பாக நின்று உயிரைத் துறந்த இந்த வண்ணாத்திக்கு முதல் மரியாதை செய்த பிறகே என்னை மக்கள் வழிபட வேண்டும் என வேண்டினாள். முனிவரும் அதற்கு இசைந்தார்.

இன்றைக்கும் பல மாரியம்மன் கோவில்களின் நுழைவு வாயிலில் அந்த வண்ணாத்திப் பெண்ணின் சிலை இருப்பதைக் காணலாம்.

மேலும், தலையும் உடலும் மாறிய தத்துவத்தை உணர்த்தவே, மாரியம்மன் ஆலயங்களில் அம்மனின் சிரசு (தலை) மட்டும் பூமிக்கு மேல் தெரியும்படி அமைக்கப்பட்டு, அதற்குப் பின்னால் ரேணுகா தேவியின் முழு உருவம் வைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us