ADDED : ஜூலை 18, 2025 04:43 AM
புதுச்சேரி: திருமண ஆசை காட்டி, பெண்ணிடம் ரூ.3. 20 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், நன்றாக பேசி பழகியுள்ளார். பின், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா சென்றுவிடலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விமான டிக்கெட் எடுப்பதற்காக முன்பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
இதனை நம்பிய அப்பெண் மர்மநபருக்கு 3 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ஆன்லைனில் முதலீடு செய்து ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 443, உறுவையாறு சேர்ந்த பெண் 21 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்த பெண் 43 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 431, நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 570, தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ஆயிரம் என, மொத்தம் 7 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 244 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
