திருச்செந்துாருக்கு 2 ஏ.சி., டீலக்ஸ் பஸ் இயக்க பி.ஆர்.டி.சி., முடிவு
திருச்செந்துாருக்கு 2 ஏ.சி., டீலக்ஸ் பஸ் இயக்க பி.ஆர்.டி.சி., முடிவு
ADDED : செப் 07, 2026 11:15 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 2 ஏ.சி., டீலக்ஸ் பஸ்களை இயக்க பி.ஆர்.டி.சி., நிர்வாகம் தயாராகி வருகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் திருச்செந்துார் சென்று வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மாலை 4:00 மணிக்கு புறப்படும் செந்துார் எக்ஸ்பிரஸ், விழுப்புரத்தில் மாலை 6:45, பண்ரூட்டி 7:14 மணிக்கு, திருப்பாபுலியூர் இரவு 7:33 மணிக்கும், சிதம்பரத்தில் இரவு 8:00 மணிக்கு நின்று செல்கிறது.
திருச்செந்துார் செல்லும் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்ட பக்தர்கள் பெரும்பாலும் இந்த ரயிலில் தான் பயணிக்கின்றனர். தினசரி ஒரு ரயில் மட்டுமே விழுப்புரம், கடலுார் வழியாக திருச்செந்துார் செல்வதால் போதுமானாதாக இல்லை. இதனால், பல பக்தர்கள் பஸ் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரியில் இருந்து தினசரி தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகமான எஸ்.இ.டி.சி., மூலம் மாலை 4:00 மணி, 5:15, 5:40, 6:15, 6:50க்கு என 5 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் திருச்செந்துாருக்கு இயக்கப்படுகின்றன. ஆனால், புதுச்சேரி அரசு சார்பில் திருச்செந்துாருக்கு இதுவரை பி.ஆர்.டி.சி., பஸ்கள் ஏதுவும் இயக்கப்படவில்லை. இதனால், புதுச்சேரி மக்கள் பி.ஆர்.டி.சி., மூலம் திருச்செந்துாருக்கு பஸ் இயக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 2 ஏ.சி., டீலக்ஸ் பஸ் இயக்க பி.ஆர்.டி.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏ.சி., பஸ் பாடி கட்டும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து இம்மாதம் இறுதிக்குள் ஏ.சி., டீலக்ஸ் பஸ்களை புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு இயக்க பி.ஆர்.டி.சி., நிர்வாகம் தயாராகி வருகிறது.
