ADDED : ஜூன் 13, 2026 06:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பதற்காகப் புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தலைமைச் செயலாளர் சரத் சவுகான், துறை செயலாளர் கிருஷ்ண மோகன் உப்பு முன்னிலையில், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் மாணிக்கதீபன், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜோசபின் சகாய ராணி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் இத்தகைய வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் வாடகை கட்டடங்களிலேயே தற்காலிகமாக நடத்தப்பட்டு வந்தன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதுச்சேரி அரசு தற்போது ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை இப்பயிற்சி மையத்திற்காக ஒதுக்கீடு செய்து, அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பித்துள்ளது.
ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில், மத்திய ஊரக அமைச்சகத்தின் நிதியுதவியுடன், புதுச்சேரி மாநில முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி வாயிலாக நிரந்தரமான திறன் வளர்ப்பு பயிற்சி மையக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தியன் வங்கியின் புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன், இந்தியன் வங்கியின் முதன்மை மாவட்ட மேலாளர் சதீஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
