ADDED : மார் 01, 2026 05:30 AM

பாகூர்: பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி திறன் மற்றும் புதுமையான சிந்தனையை வளர்க்கும் விதமாக நடந்த அறிவியல் கண்காட்சியில், முதல்வர் ராயல் டொமினிக் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் எசர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு தலைவர் ஜெய்கிஷன் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.
இக்கண்காட்சியில், அறிவியல், கணிதம், ஏ.ஐ., சுற்றுச்சூழல், சத்துணவு, வேளாண்மை, ஆரோக்கியம் மற்றும் வளம் உள்ளிட்ட தலைப்புகளில், 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தேவையற்ற பிளாஸ்டிக், மரம் உள்ளிட்ட கழிவு பொருட்களில் பல்வேறு கலைப் படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி இருந்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, வாழ்த்தினர்.

