ADDED : ஆக 15, 2026 07:31 PM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி மற்றும் வேளாண் துறை சார்பில், சுயஉதவிக் குழுவினருக்கான சமையலறை மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு முகாமை துவக்கி வைத்து, நகர்ப்புறங்களில் காய்கறித் தோட்டங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், சுயஉதவிக் குழுவினர் இத்தகைய முயற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
வேளாண் துணை இயக்குநர் (தோட்டக்கலை) சிவசுப்ரமணியன், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், பூச்சிக்கொல்லிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்த்தல், காய்கறிகளை சிறந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மூலம் வருமானத்தை அதிகரித்தல், உணவு வீணாவதைத் தடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
வேளாண் இணை இயக்குநர் சண்முகவேல், குடும்பங்களுக்குத் தேவையான புதிய மற்றும் சத்தான காய்கறிகளைப் பெறுவதற்கும், நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் சமையலறைத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதை அனைவரும் ஊக்கத்துடன் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
வேளாண் அலுவலர் சிவக்குமார், காய்கறி சாகுபடி, சமையலறைத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நடைமுறைப் பயிற்சிகளை வழங்கினார். பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி உதவி திட்ட அலுவலர் ஹெலன் ஷர்மிளா நாதன் மற்றும் வேளாண் அலுவலர் உமாராணி நன்றி கூறினர்.
