ADDED : ஏப் 17, 2026 06:04 PM

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள முக்கியச் சாலைச் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து பாதித்துள்ளது.
ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைந்துள்ள கொண்டா ரெட்டி தெரு சந்திப்பு, அப்பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாகும். இந்த சாலையைப் பயன்படுத்தி தான் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்று வருகின்றனர்.
சமீபகாலமாக இந்தச் சந்திப்பை ஒட்டியுள்ள சாலை ஓரங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. இதனால், இரு சக்கர வாகனங்கள் கூடச் சரிவரச் செல்ல முடியாதபடி சாலை குறுகியுள்ளது.
இந்தப் பகுதியில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஐ.டி., கம்பெனிகள் அமைந்துள்ளன.
தினமும் காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை பள்ளி வாகனங்கள் இந்தப் பாதையில் வரிசையாகச் செல்லும்போது, ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.
அதேபோல், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளும் இந்த சந்திப்பைக் கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். பெரிய அளவிலான குடியிருப்பு பகுதிகளை கொண்ட இப்பகுதியில், மக்கள் சாலையைக் கடப்பதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளால் சிறு சிறு விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நெரிசல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
மாவட்ட நிர்வாகமும், நகராட்சி அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றிச் போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும்.
