இலங்கைக்கு ஐம்பொன் சிலைகள் கடத்த முயன்ற இருவர் கைது
இலங்கைக்கு ஐம்பொன் சிலைகள் கடத்த முயன்ற இருவர் கைது
ADDED : ஜூலை 06, 2026 02:31 AM

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், தர்மபுரம், கீழத்தெரு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில், திருடப்பட்ட கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின்பால் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, அபிராமசுந்தரம் அபிராம், 44, என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டில், 5 ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அபிராமசுந்தரம் அபிராம், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ரயிலடி தெருவை சேர்ந்த ஷாஜகான், 46, ஆகிய இருவரும் சிலை கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மீட்கப்பட்ட ஐந்து சிலைகளில் நான்கு சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு இலுவப்பட்டு கிராமத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலைகள் என்பதும், இந்த சிலைகள் கடல் வழியாக படகு முலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இது குறித்த நகர போலீசார் வழக்குப் பதிந்து,அபிராமசுந்தரம் அபிராம், ஷாஜகான் இருவரையும் நேற்று கைது செய்தனர். சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
