ADDED : ஆக 20, 2026 11:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை கையாளுவதில் தவறு நடந்துள்ளதாக ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் துணைவேந்தர் அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை தனது அலுவலகத்தை ஆடம்பரமாக கட்டமைப்பதில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் துணை வேந்தர், மாணவர்களின் அடிப்படை உரிமைகளான விடுதி உணவு, குடிநீர் தட்டுப்பாடு, போதிய வசதிகள் இல்லாத தங்கும் விடுதி, உள்ளூர் மாணவர்களுக்கான பஸ் வசதி, நவீனப்படுத்தாத ஆய்வகங்கள், உதவித்தொகை கொடுப்பதில் தாமதம், விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த ஊக்கத்தொகை போன்ற உரிமைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை.
ஆடம்பரமாக கட்டப்படும் துணைவேந்தர் அலுவலகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு சார்பாக குழு அமைத்து நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தவறுகளை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் சூர்யா சரவணன் தலைமையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
