ADDED : டிச 25, 2024 04:25 AM
புதுச்சேரி : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், கூறியதாவது;
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியை பேரிடர் மாநிலமாக அரசு அறிவித்தது. அதன்படி, நவ. டிச., நில வரி, சொத்து வரி, விவசாய கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன்கள் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி, மின் கட்டண சலுகைகளை, பேரிடர் மேலாண்மை பாதிப்பு சட்டத்தின்படி அறிவிக்க வேண்டும்.
சலுகை அறிவிக்காத அரசு, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தி புத்தாண்டு பரிசாக வழங்கி உள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். நாடு முழுதும் மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் 71 ஆயிரம் பேர் தேர்வு செய்து பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கூட வேலை வாய்ப்பு பெறவில்லை.
மாற்றத்திறனாளிகளுக்கு விழா நடத்துவது மட்டும் அரசின் கடமை முடிந்து விட்டதாக எண்ணக்கூடாது.மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு சிவப்பு ரேஷன் கார்டு, 75 சதவீத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, லிப்ட் ஆபரேட்டர், டெஸ்பேட்ச் கிளார்க் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பணியிடங்களை மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் அபகரித்துள்ளதை மீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்' என்றார்.
