வில்லியனுார் பைபாசில் சென்டர் மீடியன் இடைவெளி மூடல் வாகன ஓட்டிகள் நிம்மதி
வில்லியனுார் பைபாசில் சென்டர் மீடியன் இடைவெளி மூடல் வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூலை 03, 2026 02:55 AM

வில்லியனுார்: வில்லியனுார் பைபாஸ் சாலையில், பெட்ரோல் பங்க் எதிரே, சென்டர் மீடியனில் இருந்த இடைவெளியை போக்குவரத்து போலீசார் நிரந்தரமாக மூடியதால், விபத்து ஆபத்து நீங்கியதாக வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, இந்திரா சதுக்கம் முதல், எம்.என். குப்பம் வரை சாலையை அகலப்படுத்தி, இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, சென்டர் மீடியனும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதோ, அதனை கெடுக்கும் வகையில் பெரும்பாலான இடங்களில் தேவையின்றி இடைவெளிகள் விடப்பட்டது. இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, சென்டர் மீடியனில் உள்ள இடைவெளிகளில் திடீர், திடீரென புகும் வாகனங்களால் விபத்து நடந்து வந்தது.
குறிப்பாக, வில்லியனுார் பைபாஸ் வளைவு பகுதியில்பெட்ரோல் பங்க் எதிரே சென்டர் மீடியனில் உள்ள இடைவெளியால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வந்தது. இதனிடையே, போலீஸ் மக்கள் மன்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்துகள் நடப்பதை சுட்டிக் காட்டி தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து, போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில், வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் குழுவினர், கடந்த 1ம் தேதி பைபாஸ் வளைவு பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரேசென்டர் மீடியனில் இருந்த இரு இடைவெளியை 1.5 மீட்டர் உயரமுள்ள கான்கிரீட் கட்டைகளை வைத்து நிரந்தரமாக மூடினர்.போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதேபோன்று, இந்திரா சதுக்கம் முதல் எம்.என். குப்பம் வரையில் சென்டர் மீடியனில் ஆங்காங்கே சம்பந்தமே இல்லாமல் விடப்பட்டுள்ள இடைவெளிகளை ஆய்வு செய்து, இடைவெளிகளை நிரந்தரமாக மூடி, விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
