ADDED : செப் 08, 2026 04:42 PM

புதுச்சேரி: கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, மதர் தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனம், பிசியோதெரபி கல்லுாரி, இந்தியன் மகளிர் வலையமைப்பு, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி போர்ட் மற்றும் O2பி பிசியோதெரபி மற்றும் செயல்திறன் கிளினிக் இணைந்து உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பிசியோதெரபி விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.
நடைபயணத்தை மதர் தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் அய்யப்பன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி போர்ட் தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தனர்.
இந்தியன் மகளிர் வலையமைப்பின் டாக்டர்கள் சுப்ரியா, கவிபிரியா, பயல், நளினி கமாரா, சவுமியா ஆகியோர் 2026ம் ஆண்டு உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, அதன் கருப்பொருளாக ‘இருதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பதில் பிசியோதெரபியின் முக்கியத்துவம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நடைப்பயணத்தில் பங்கேற்ற பிசியோதெரபி மாணவ, -மாணவிகள், பேராசிரியர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
இதன் மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரித்து, ஆரோக்கியமான புதுச்சேரியை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
