/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயமின்றி நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் 'அட்வைஸ்'
/
பயமின்றி நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் 'அட்வைஸ்'
பயமின்றி நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் 'அட்வைஸ்'
பயமின்றி நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் 'அட்வைஸ்'
ADDED : பிப் 07, 2026 03:10 AM

புதுச்சேரி: மாணவர்களின் மன அழுத்தம் குறைய ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் நேற்று கலந்துரையாடினார். நிகழ்ச்சி, பள்ளிக் கல்வித்துறை சார்பில், கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த கவர்னர் கைலாஷ்நாதன், இந்தாண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமருடன் நேரடியாக கலந்து கொண்ட கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கீர்த்தனா, கடந்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் காவேரி பப்ளிக் பள்ளி மாணவி கிருத்திகா சங்கர் இருவரையும் மேடைக்கு அழைத்து சிறப்பித்தார்.
தொடர்ந்து அவர், பேசுகையில், பள்ளி படிப்பில் தேர்வு என்பது முக்கிய அங்கம். தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என எல்லா மாணவர்களும் முயற்சிக்கின்றனர். இதனால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவே பிரதமர் மோடி நாடு முழுதும் உள்ள மாணவர்களோடு நேரடியாக உரையாடுகிறார். பிரதமரின் உரையை, மனதில் கொண்டு நீங்கள் தேர்வுகளை எவ்வித பயமும் இல்லாமல் நம்பிக்கையோடு எழுத வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும்போது நேர்மறையான சிந்தனை வேண்டும். முக்கியமானதை குறித்து வைத்து படிக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்பம் பெரிய அளவில் உங்களுக்கு உதவும். சில நேரத்தில், நாம் எதிர்பார்ப்பது போல மதிப்பெண் பெற முடியாமல் போகலாம். தோல்வி ஏற்படும் போது அதில் இருந்து முன்னேறுவது எப்படி என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
பள்ளிக் கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல. விளையாட்டு, கலை, இசை போல, வாழ்க்கையில் வேறு முக்கிய அம்சங்களும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்களின் மன அழுத்தம் குறைய அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்களே, தேர்வுக்கு தயாராகும் போது ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
சரியான உணவு, தேவையான தூக்கம் வேண்டும். உடற்பயிற்சி, யோகா செய்து உடலையும் மனதையும் சமநிலையில் வைக்க வேண்டும். தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார், இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

