/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'உலக' தொடருக்கு இந்தியா பயிற்சி * கவாஸ்கர் பாராட்டு
/
'உலக' தொடருக்கு இந்தியா பயிற்சி * கவாஸ்கர் பாராட்டு
'உலக' தொடருக்கு இந்தியா பயிற்சி * கவாஸ்கர் பாராட்டு
'உலக' தொடருக்கு இந்தியா பயிற்சி * கவாஸ்கர் பாராட்டு
ADDED : ஜன 26, 2026 11:00 PM

புதுடில்லி: ''நியூசிலாந்துக்கு எதிரான தொடரை, 'டி-20' உலக கோப்பைக்கான பயிற்சியாக பார்க்க வேண்டும். இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க சரியான முறையில் தயாராகி வருகிறது,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 238/7 ரன் குவித்து வென்றது. அடுத்த இரு போட்டியில் 15.2 ஓவர் (209/3), 10 ஓவரில் (155/2) இலக்கை 'சேஸ்' செய்து அசத்தியது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' கவாஸ்கர் 76, கூறியது:
'டி-20' உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடர், இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக உள்ளது. உண்மையான சவால், பிப்., 7ல் (உலக கோப்பை துவக்கம்) துவங்குகிறது.
தக்கவைக்க முயற்சி
'டி-20' தொடரை வென்று விட்ட நிலையில், அடுத்து உலக கோப்பையை தக்கவைக்க கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக இந்திய அணியினர் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.
பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் கடந்த இரு போட்டியில் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல், இந்திய அணி எளிதாக வென்றது. இது இந்திய அணியின் திறமையை காட்டுகிறது.
தற்போதைய தொடரில் பின் வரிசை வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பந்தை எப்படி, சரியான நேரத்தில், சரியான இடத்தில் விளாசுவது என தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவிர, வரும் 'டி-20' உலக கேப்பை தொடரையும், எந்த எதிரணியையும் இந்திய அணியினர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சாதிக்க வேண்டும் என்ற இந்திய வீரர்களின் நோக்கத்தை இது தெளிவாக காட்டுகிறது.
சபாஷ் அபிஷேக்
இரண்டு ஓவரில் அரைசதம் (12 பந்து) என்ற சாதனையை தகர்ப்பது மிக கடினமானது. ஆனால் இதற்கான தகுதி இருப்பதை, அபிஷேக் சர்மா, கடந்த பல போட்டிகளில் நிரூபித்து வருகிறார். முதலில் 16, தற்போது 14 பந்தில் அரைசதம் எட்டினார். விரைவில் சாதிக்கலாம்.
12 பந்தில் அரைசதம் விளாசினால், யுவராஜ் சிங் தான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருப்பார். ஏனெனில், 'குருவின்' சாதனையை 'சிஷ்யன்' தகர்ப்பதில், தவறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியில் திலக் வர்மா
இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா 23. விஜய் ஹசாரே டிராபியில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்கு 'ஆப்பரேஷன்' செய்ததால், நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரின் முதல் 3 போட்டியில் இருந்து விலகினார்.
தற்போது காயம் சரியான நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், மீண்டு வரத் தேவையான பயிற்சிகளை துவக்கினார். இவர் முழு 'பிட்னஸ்' பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். வரும் பிப். 3ல் முழு உடற்தகுதி பெறும் பட்சத்தில் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார்.
ஷ்ரேயஸ் ஐயர் வாய்ப்பு
திலக் வர்மா இல்லாத நிலையில் ஷ்ரேயஸ் ஐயர், இந்திய அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 போட்டிக்கான இந்திய அணி விபரம்:
சூர்யகுமார், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான், ரவி பிஷ்னோய்.
யுவராஜ் கிண்டல்
மூன்றாவது போட்டியில் 14 பந்தில் அரைசதம் அடித்தார் அபிஷேக் சர்மா. சர்வதேச 'டி-20'ல் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் வரிசையில் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு (12 பந்து) அடுத்து 2வது இடம் பிடித்தார்.
அபிஷேக் சர்மாவுக்கு வழிகாட்டியாக இருப்பவர் யுவராஜ் சிங். இருவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர் கூறுகையில்,'' சிறப்பாக விளையாடினாய். இந்த விளாசலை தொடர வேண்டும். எனினும், உன்னால் இன்னும் 12 பந்தில் அரைசதம் அடிக்க முடியவில்லையே,'' என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா கூறுகையில்,'' யுவராஜ் சாதனையை முறியடிப்பது முடியாத காரியம். ஆனால், யாராவது ஒருவர் இதை செய்யலாம், ஏனெனில் இத்தொடரில் பேட்டர்கள் அனைவரும் ரன் மழை பொழிகின்றனர்,'' என்றார்.
'ஸ்பிரிங் பேட்'
கடந்த 2003 உலக கோப்பை பைனலில் இந்தியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் 140 ரன் குவித்து மிரட்டினார். அப்போது ரசிகர்கள்,' பாண்டிங் பேட்டுக்குள் 'ஸ்பிரிங்' வைத்திருக்க வேண்டும், இதனால் தான் பந்துகள் அனாசயமாக பறக்கின்றன,' என விமர்சித்தனர். சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலத்தில் அந்த வதந்தி, பெரியளவில் பேசப்பட்டன.
தற்போது மூன்றாவது 'டி-20' போட்டியில் நியூசிலாந்தின் இலக்கை, இந்திய அணி 10 ஓவரில் (155/2) எட்டி சாதனை படைத்தது. அபிஷேக் 20 பந்தில் 68 ரன் (5 சிக்சர், 7 பவுண்டரி), சூர்யகுமார் 26 பந்தில் 57 ரன் (3 சிக்சர், 6 பவுண்டரி) விளாசினர்.
போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் 'பெவிலியன்' திரும்பினர். அப்போது, அங்கிருந்த கான்வே, டபி உள்ளிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள், அபிஷேக் பேட்டினை வாங்கி, முன்னும் பின்னும் வியப்பாக பார்த்தனர். இது, 'ஸ்பிரிங் பேட்' சம்பவத்தை நினைவு படுத்தியது.
ஒவ்வொரு பந்தும்...
கவாஸ்கர் கூறுகையில்,'' பொதுவாக 'டி-20' போட்டியில், ஒவ்வொரு பந்திலும் ரன் எடுக்க வேண்டும். அது சிக்சர், பவுண்டரியாகத் தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு ரன்களாக இருந்தால் கூட போதும். ஆனால் எந்த பந்தையும் வீணடிக்கக் கூடாது. இதை நினைத்து வீரர்கள் செயல்பட வேண்டும். இதனால் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும், விரைவில் மீண்டு வந்து வெற்றியை நோக்கி முன்னேறலாம்,'' என்றார்.

