/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்
/
விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்
ADDED : மே 23, 2024 11:01 PM

ஆமதாபாத்: ஐ.பி.எல்., அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்.
தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்/பேட்டர் தினேஷ் கார்த்திக், 38. கடந்த 2004ல் இந்திய அணியில் அறிமுகமானார். தோனி வரவுக்கு பின் இவரது இடம் கேள்விக்குறியானது. விடாமுயற்சியால் அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார்.
ஐ.பி.எல்., தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு மவுசு அதிகம். 2008ல் இருந்து அனைத்து தொடரிலும் பங்கேற்றுள்ளார். டில்லி அணிக்காக முதலில் களமிறங்கினார். பின் பஞ்சாப், மும்பை அணிக்கு சென்றார். 2014ல் மீண்டும் டில்லி அணிக்கு அதிகபட்சமாக ரூ. 12.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2015ல் பெங்களூரு அணி இவரை ரூ. 10.5 கோடிக்கு வாங்கியது. அடுத்து குஜராத் அணிக்காக விளையாடினார். 2018ல் கோல்கட்டாவின் கேப்டனாக செயல்பட்டார். 2022ல் மீண்டும் பெங்களூரு பக்கம் (ரூ. 5.5 கோடி) திரும்பினார்.
இம்முறை 'பினிஷராக' ஜொலித்தார். கடைசி கட்டத்தில் மிரட்டினார். 15 போட்டிகளில் 326 ரன் (சராசரி 36.22, 'ஸ்டிரைக் ரேட்' 187.55) எடுத்தார். 17 ஆண்டு கால ஐ.பி.எல்., பயணத்தில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். சென்னைக்காக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 257 போட்டிகளில் 22 அரைசதங்களுடன் 4,842 ரன், 145 'கேட்ச்', 37 'ஸ்டம்பிங்' செய்துள்ளார்.
மீண்டும் வர்ணனை
நேற்று முன் தினம் ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூரு அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. இந்த சோகத்துடன் ஐ.பி.எல்., அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக். மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கோலி, டுபிளசி உள்ளிட்ட சக வீரர்கள் ஆறுதல் அளித்தனர். பெங்களூரு வீரர்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று கவுரவம் அளித்தனர்.
வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை. இனி இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பில்லை. மீண்டும் வர்ணனையாளராக அவதாரம் எடுக்கலாம்.

